பா.ஜ.க. தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொழிலாளி கைது


பா.ஜ.க. தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 14 July 2019 10:15 PM GMT (Updated: 14 July 2019 5:34 PM GMT)

கே.புதுப்பட்டி அருகே பா.ஜ.க. தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி நம்பூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). பா.ஜ.க. தொண்டரான இவர், அப்பகுதியில் சரக்கு வேன் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விற்பனை செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (38). அரிசி ஆலையில் வேலை பார்த்து வரும் பாண்டிசெல்வத்திற்கும், நடராஜனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடராஜன் குடும்பத்துடன் அவரது ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ளவர்களும் நடராஜன் வீட்டின் முன்பு குவிந்தனர்.

தொழிலாளி கைது

இதுகுறித்து நடராஜன் கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், பாண்டிசெல்வம் தனது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்று விட்டதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து பாண்டிசெல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பா.ஜ.க. தொண்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story