சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 July 2019 11:00 PM GMT (Updated: 14 July 2019 8:23 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று காவிரி விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோட்டூர்,

கோட்டூர் அருகே இருள்நீக்கியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். திருவாருர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். நாகை மாவட்ட செயலாளர் ராமதாஸ் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தென்மேற்கு பருவமழை இதுவரையில் உரிய அளவில் உரிய காலத்தில் பெய்யவில்லை. இந்தநிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதிக்குள் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்க வேண்டும். கோடை சாகுபடி செய்ய உழவு மானியம், தண்ணீர் இரைக்க ஆயில் என்ஜின்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும். தேவையான தரமான நெல் விதைகள் முழு மானியத்தில் பாகுபாடின்றி வழங்க வேண்டும். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.

முற்றுகை போராட்டம்

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி வருகிற 25-ந்தேதி உண்ணாவிரத போராட்டமும், 26-ந்தேதி முற்றுகை போராட்டமும் டெல்லி நாடாளுமன்றம் முன்பு நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில கவுரவ தலைவர் நீலன்.அசோகன், அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மண்டல தலைவர் அண்ணாதுரை, தஞ்சை மாவட்ட செயலாளர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர் நன்றி கூறினார்.

Next Story