பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2019 10:30 PM GMT (Updated: 15 July 2019 7:09 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்ட கிராம பஞ்சாயத்து இணைப்புக்குழு (சி.ஐ.டி.யு.), புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று மாநில தலைவர் சண்முகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், முற்றுகையிட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் முற்றுகை போராட்டம் நடத்த வந்தவர்கள் கலெக்டர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி ஓ.டி.பி. இயக்குனர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும், பணிக்கொடை ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். பணி பதிவு செய்ய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும்.

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஓ.டி.பி. இயக்குனர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓ.டி.பி. இயக்குனர்களுக்கு தொட்டியை சுத்தம் செய்ய ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு ஊதிய உயர்வு, நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story