கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி 3 பேர் படுகாயம்


கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 July 2019 9:45 PM GMT (Updated: 15 July 2019 8:39 PM GMT)

கயத்தாறு அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு,

பாளையங்கோட்டை நயினார் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47). இவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனாரூத்தில் உள்ள தனியார் காற்றாலை பண்ணையில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். அதே காற்றாலை பண்ணையில் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரான பாலகிருஷ்ணனும் (45) வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

பாலகிருஷ்ணன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு, நேற்று காலையில் கயத்தாறுக்கு திரும்பி வந்தார். அவரை அழைத்து செல்வதற்காக ராமச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அய்யனாரூத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

கயத்தாறு அருகே மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர்கள் செல்லையா மகன் விஜயகுமார் (23), முனியாண்டி மகன் அஜித் (23). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்று கொண்டிருந்தனர். கயத்தாறு அருகே மானாங்காத்தான் வளைவில் திரும்பியபோது, எதிரே ராமச்சந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், விஜயகுமார், அஜித் ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த ராமச்சந்திரனின் உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் இறந்த ராமச்சந்திரனுக்கு சசிகலா என்ற மனைவியும், முத்துலட்சுமி (12), சுபஸ்ரீ (9) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். படுகாயம் அடைந்த விஜயகுமார் பொக்லைன் ஆபரேட்டராகவும், அஜித் கிளனராகவும் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story