கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15-வது ஆண்டு நினைவு தினம்: பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15-வது ஆண்டு நினைவு தினம்: பலியான 94 குழந்தைகளுக்கு பெற்றோர்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 6:28 PM GMT)

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் பலியான 15-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் பெற்றோர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்து நடந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இதனைத்தொடர்ந்து 15-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை குழந்தைகளை தீயில் பறிகொடுத்த பெற்றோர் தங்கள் வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து படையலிட்டனர்.

பின்னர் விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளி முன்பு திரண்ட பெற்றோர், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த 94 குழந்தைகளின் உருவப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மலர் தூவியும், திண்பண்டங்களை வைத்தும் குழந்தைகளின் படங்களை பார்த்து கதறி அழுதனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பள்ளியில் இருந்து பெற்றோர் சார்பில் ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவிடத்துக்கு சென்று அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியன், தி.மு.க. நகர செயலாளர் தமிழழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரத்னா சேகர், அ.ம.மு.க. மாநில துணைச் செயலாளர் ரெங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாரதி மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை பள்ளியில் இருந்து பெற்றோர், அகல் தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றினர்.

தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, எங்கள் குழந்தைகள் தியாக குழந்தைகள். எனவே குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டுதோறும் ஜூலை 16-ந் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும், அன்றைய தினம் அனைத்து பள்ளிகளிலும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த அரசு உத்திரவிட வேண்டும். மேலும் கும்பகோணத்துக்கு ஆண்டுதோறும் ஜூலை 16-ந் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்றனர்.

Next Story