பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை


பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 5:57 PM GMT)

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சி,

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவ்வப்போது போலீசார் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் உத்தரவின்பேரில், ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணி தலைமையில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்பினர். மேலும் ரெயில் நிலைய வளாகத்திலும், நடை மேடைகளிலும் மர்ம பொருட்கள் ஏதேனும் உள்ளதா? சந்தேகப்படும்படி நபர்கள் யாரேனும் சுற்றிதிரிகிறார்களா? என சோதனையிட்டனர்.

திருச்சி வழியாக சென்ற பல்லவன், வைகை, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களிலும் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை நடத்தினர். ரெயில்வே பாதுகாப்பு படையினர் மெட்டல் டிடெக்கர் கருவி உதவியுடன் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது சந்தேகப்படும் படி நபர்கள் யாரும் பிடிபடவில்லை. மேலும் மர்ம பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பு ஒத்திகையின் காரணமாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் திடீர் சோதனையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் டெல்லியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 14 பேரையும் கைது செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரெயில் நிலையங்கள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக இதுபோன்ற சோதனை நடத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story