அக்டோபர் 1-ந் தேதி முதல் உரிமம் இன்றி செயல்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை கலெக்டர் தகவல்


அக்டோபர் 1-ந் தேதி முதல் உரிமம் இன்றி செயல்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 8:11 PM GMT)

அக்டோபர் 1-ந் தேதி முதல் உரிமம் இன்றி செயல்படும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்ட மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று மாலை நடந்தது. 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த கூட்டத்துக்கு உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செந்தில்குமார், மாநகர உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குமாரபாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழிகாட்டுதல் குழு தலைவரும், கலெக்டருமான பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்க உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறிய ஓட்டல்களில் மட்டும் உணவு பொருள் மாதிரி எடுக்கக்கூடாது. குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய, பெரிய ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் போன்றவற்றிலும் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். உணவு பொருள் ஆய்வுகளை அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டம் முழுவதும் உள்ள உணவு பொருள் விற்பனை நிறுவனங்களில் (ஓட்டல்கள், கடைகள்) இன்னமும் 25 சதவீத நிறுவனங்கள் உணவு பொருள் தயாரிப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவற்றை பெறாமல் இருக்கிறார்கள். எனவே 3 மாத காலத்துக்குள் அதாவது அடுத்த வழிகாட்டுதல் குழு கூட்டத்துக்கு முன் மீதமுள்ள 25 சதவீதம் பேரையும் உரிமம் மற்றும் பதிவுச்சான்று ஆகியவற்றை பெற செய்ய வேண்டும். இதற்காக இம்மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் உரிமம் மற்றும் பதிவு சான்று இல்லாமல் நடத்தப்படும் உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உணவு பொருள் பொட்டலங்களில் ‘ஸ்டாப்லர் பின்‘ பயன்படுத்தக்கூடாது. இதை கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட, அதாவது 51 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை உணவு பொருட்கள் பொட்டலமிட பயன்படுத்தக்கூடாது.

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முதல் கடற்கரை சாலை வரையிலான பகுதியில் சுத்தமான சாலையோர உணவகங்களின் மையத்தை ஏற்படுத்தி, உணவு பாதுகாப்பு சட்டப்படி தரமான, பாதுகாப்பான உணவுகள் சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நமது மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான உதவிகளை செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் சுலைமான், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், மாநகர நல அதிகாரி கின்சால், ஆவின் பொதுமேலாளர் தியானேஷ் பாபு, வட்டார உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் பிரவீன் ரெகு, தங்கசிவம், வின்சென்ட் கிளாட்சன், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி லலிதா, ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஷாஜகான், குமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் தாமஸ், சிவில் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை செய்திருந்தது.

Next Story