அவினாசி அருகே, பனியன் நிறுவன மேலாளர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை


அவினாசி அருகே, பனியன் நிறுவன மேலாளர் குத்திக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2019 10:45 PM GMT (Updated: 17 July 2019 11:32 PM GMT)

அவினாசி அருகே பனியன் நிறுவன மேலாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி,

அவினாசி அருகே உள்ள கந்தம்பாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த அம்மாசை என்பவரது மகன் கணபதி (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் கணபதி வேலை முடிந்து இரவுதான் வீடு திரும்புவார். அதன்படி நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் பனியன் நிறுவனத்தில் வேலை முடிந்து இரவு 8.30 மணிக்கு நிறுவனத்தை விட்டு வெளியே வந்து வீட்டிற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு போய் சேரவில்லை.

இதற்கிடையில் கந்தம்பாளையம் நால்ரோடு பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் 30வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு ஆம்புலன்சில் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கந்தம்பாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்த கணபதி என்றும், பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்ததும், பணி முடிந்து வீடு திரும்பும்போது மர்ம ஆசாமிகள் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவரை கொலை செய்த ஆசாமிகள் யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பனியன் நிறுவன மேலாளர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story