மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்


மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 3:03 PM GMT)

மார்த்தாண்டத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

குழித்துறை,

தமிழக அரசு சார்பில் பிளஸ்– 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் பகுதியில் கடந்த ஆண்டு பிளஸ் –2 படித்த மாணவ– மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மாணவர்கள் தற்போது கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மடிக்கணினி கிடைக்காத மாணவர்கள் நேற்று மார்த்தாண்டம் வெட்டுமணியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள குழித்துறை கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்களிடம்  தங்களின் கோரிக்கையை எழுத்து பூர்வமாக கல்வி அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story