புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டம்


புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 6:58 PM GMT)

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கிட வேண்டும். நோயாளிகளின் சேவைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்களை குறைக்க கூடாது. அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும். தமிழக சுகாதாரத்தின் அடித்தளம் காத்திட அரசு டாக்டர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 12-ந் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அரசு டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை 2 மணி நேரம் புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் 2 மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனை

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் காலை 9.30 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை டாக்டர்கள் புறக்கணித்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், ஜனநாயக தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம், அனைத்து மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். டாக்டர்களின் போராட்டத்தால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வந்திருந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் டாக்டர்களின் வருகைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததால் அவதிக்குள்ளாகினர். காலை 9.30 மணிக்கு மேல் போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் பணிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு டாக்டர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளை புறக்கணிப்பு போராட்டத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். டாக்டர்களின் கோரிக்கைகள் அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தினை சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து ஈடுபடுவோம் என்றனர்.

Next Story