மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் பாடாலூரில் 24-ந் தேதி தொடக்கம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் பாடாலூரில் 24-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 6:37 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் பாடாலூரில் 24-ந் தேதி தொடங்குகிறது.

பெரம்பலூர்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான மருத்துவ முகாம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு 24-ந் தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்திற்கு 26-ந் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு 29-ந் தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் சிறப்பு டாக்டர்களான எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர், மனநல டாக்டர், காது மூக்கு தொண்டை டாக்டர், கண் டாக்டர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளை கண்டறிந்து தேர்வு செய்யவுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story