சக்லேஷ்புராவில் தொடர் கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து


சக்லேஷ்புராவில் தொடர் கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 8:05 PM GMT)

சக்லேஷ்புராவில் தொடர் கனமழையால் ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தில் குடகு, மங்களூரு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை 4 நாட்கள் குடகு, தட்சிண கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மலைநாடு என்றழைக்கப்படும் ஹாசன் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.

ஹாசன் மாவட்டத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால், பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு சக்லேஷ்புரா வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் ஏராளமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்டவாளத்தில் பெரிய, பெரிய பாறைகளும் உருண்டு விழுந்துள்ளது.

இதுபற்றி அறிந்ததும் அந்த தண்டவாளத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடக்கும் மண், பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த பணியில் மெதுவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சக்லேஷ்புரா பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கிடக்கும் மண், பாறைகளை அகற்றும் பணி நடந்து வருவதால், பெங்களூரு-மங்களூரு இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைசூரு ரெயில்வே மேலாளர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சக்லேஷ்புரா-சுப்பிரமணியா செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. பாறைகளும் தண்டவாளத்தில் விழுந்து உள்ளது. இந்த பாதிப்பை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் 21-ந் தேதி(இன்று) பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து மங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16575) ரத்து செய்யப்படுகிறது. அதுபோல 22-ந் தேதி(நாளை) மங்களூருவில் இருந்து பெங்களூரு யஷ்வந்தபுரத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16576) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

Next Story