அரியலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்


அரியலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 8:15 PM GMT)

அரியலூர் மாவட்ட நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து கொள்ளலாம் என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், பொய்யாத நல்லூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, சோலைவனம் ஏரி ஆகிய 2 ஏரிகளை தன்னார்வ அமைப்புகள் கொண்டு தூர்வாரும் பணியினை கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது கலெக்டர் வினய் பேசுகையில், பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள பெரிய ஏரியினை தன்னார்வ அமைப்புகள் மூலம் தூர்வாரப்படுகின்றன. இந்த ஏரியின் பரப்பளவு 60 ஏக்கர். தாசில்தார்கள் மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் முறையாக கணக்கெடுத்தபின், இந்த ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணி, மதகுகள் புனரமைக்கும் பணிகள் நடைபெறும்.

இந்த ஆண்டு பருவமழை காலங்களில் ஏரி முழுவதும் மழைநீர் சேகரிக்கப்பட்டு, விவசாயம் செழிக்க வேண்டும். விவசாய நிலங்களில் தொடர்ந்து ஒரே வகையாக பயிரிடுவதால், மண்ணின் ஊட்டச்சத்து, தரம் குறைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்யும் விதமாக ஏரிகளில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை தங்களது நிலங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனவே விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கு வண்டல் மண் தேவைப்படும் பட்சத்தில் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்திற்குரிய கணினி சிட்டா நகலுடன் குடும்ப அட்டை நகல் அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்து கொள்ளும்பட்சத்தில் வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ள உரிய அனுமதி வழங்கப்படும் என்றார்.

இதில் தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர் கரையரசன், வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Next Story