நொய்யல் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


நொய்யல் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 8:39 PM GMT)

நொய்யல் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள நடையனூரை சேர்ந்தவர் கவியரசு. தேங்காய் வியாபாரி. இவரது மனைவி யசோதா (வயது 37). இவர் நாமக்கல் மாவட்டம், ரெட்டிபட்டியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கவியரசு தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிப்பதற்காக சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கவியரசுவின் குடோனில் தேங்காய் மூட்டைகளை இறக்க தொழிலாளர்கள் சிலர் கவியரசு வீட்டிற்கு வந்தனர். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கவியரசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக அவரது உறவினர்களுக்கும், வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் உறவினர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தங்கசங்கிலி மற்றும் ரூ.4 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல நொய்யல் அருகே நடையனூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் காளியம்மாள். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.7 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

பொதுமக்கள் அச்சம்

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தனித்தனியாக வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

பின்னர் 2 வீடுகளுக்கும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story