வாய்க்காலை தூர்வார ஒரு தரப்பினர் எதிர்ப்பு: விவசாயிகளை ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம்


வாய்க்காலை தூர்வார ஒரு தரப்பினர் எதிர்ப்பு: விவசாயிகளை ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 9:24 PM GMT)

வாய்க்காலை தூர்வார ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், விவசாயிகளை ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சோமரசம்பேட்டை,

கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து திருச்சி மாவட்டம் தாயனூர் வரை பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த வாய்க்காலை குடிமராமத்து பணி மூலம் தூர்வார அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இதில் திருச்சி மாவட்டம் புலியூரில் இருந்து தாயனூர் வரை வாய்க்காலை தூர்வார, புலியூரில் உள்ள அரசு பதிவு செய்துள்ள கட்டளை மேட்டு வாய்க்கால் கடைமடை பாசனதாரர்கள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக கடந்த 11-ந்தேதி பொதுப் பணித்துறை உதவிப்பொறியாளர் கொளஞ்சிநாதன் விவசாயிகளை அழைத்து ஆலோசனை வழங்கினார். அதனையடுத்து திருச்சி மாவட்டம் புலியூர் பகுதி பழைய கட்டளை மேட்டு வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் தொடங்க இருந்தன. அப்போது, மற்றொரு விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு கேட்டு மனு

இதனால் தூர்வாரும் பணி முடங்கி போனது. இந்த வருடம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு கடைமடை பகுதிகளுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர்் கிடைக்கும் என நம்பி இருந்த விவசாயிகள் இதனால் கவலை அடைந்தனர். இதனையடுத்து பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு குடிமராமத்து பணிகள் நடைபெற பாதுகாப்பு கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்தநிலையில் புலியூர், போசம்பட்டி, போதாவூர், தாயனூர், அதவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து போசம்பட்டியில் உள்ள சங்கிலி ஆண்டவர் கோவில் அருகில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் சின்னதுரை, சமூக நீதி பேரவைத் தலைவர் ரவிக்குமார், பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் 6 பிரிவு வாய்க்கால்களின் பாசனதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

முடிவில் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் கடைமடையின் சங்க பிரதிநிதிகள் மற்றும் 6 பிரிவு வாய்க்கால்களுக்கு உரிய பாசனதாரர்கள் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசுவதெனவும், சுமுகமான முறையில் வாய்க்காலை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Next Story