சரக்கு, சேவை வரிக்கான புதிய சான்று பெற இ-சேவை மையத்தில் பதிவு கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்


சரக்கு, சேவை வரிக்கான புதிய சான்று பெற இ-சேவை மையத்தில் பதிவு கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 9:31 PM GMT)

விவசாயிகள் பங்களிப்புடன் குடிமராமத்து பணி நடக்க இருப்பதாகவும், சரக்கு மற்றும் சேவை வரிக்கான புதிய சான்று பெறுவதற்கு இ-சேவை மையத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணித்துறை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசனதாரர், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், அரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி மற்றும் விவசாய பாசன தாரர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை பாதுகாத்து செம்மைப்படுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு 2019-20-ம் ஆண்டிற்கு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக வாய்க்கால், குளங்கள் மற்றும் ஏரிகளின் கட்டுமானங்கள் புனரமைத்தல், தூர்வாருதல், வாய்க்கால் கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் பணி, அடைப்பு பலகை புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மொத்தம் 88 குடிமராமத்து பணிகளுக்காக ரூ.12¾ கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதற்கு திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் அரசு நிதியாகவும், 10 சதவீதம் பதிவு பெற்ற பாசன விவசாயிகள் சங்கம் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளலாம்.

இ-சேவை மையத்தில் பதிவு

இப்பணிகள் அனைத்தும் ஆயக்காட்டுதாரர்கள் சங்கம் அல்லது பாசனதாரர்கள் சங்கம் மூலமாக மட்டுமே குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளன. பதிவு பெற்ற விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்கும், ஜி.எஸ்.டி. தொடர்பாகவும், ஆதார் அட்டை, வங்கி கணக்கு ஆகிய அனைத்து ஆவணங்களும் இருந்தால் தான் பாசனதாரர்கள் சங்கம் முழு அளவில் பணிகள் மேற்கொள்ள இயலும்.

ஒவ்வொரு பாசனதாரர் சங்கத்திலும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களை கொண்ட சங்கம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்கு பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு போன்ற ஆவணங்கள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான புதிய பதிவு சான்று பெறுவதற்கு தேவையான ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம் மூலம் பயன்பெறும் விவசாயிகள், பாசனதாரர்கள் சங்கங்களுக்கும், 25-ந் தேதி (வியாழக்கிழமை) திருச்சி அரியாறு வடிநில கோட்டம் மூலம் பயன்பெறும் விவசாயிகள், பாசனதாரர்கள் சங்கங்களுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய உதவி செய்யப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story