தென்னிலை அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது தர்மபுரியை சேர்ந்தவர்


தென்னிலை அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது தர்மபுரியை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 23 July 2019 11:00 PM GMT (Updated: 23 July 2019 7:18 PM GMT)

தென்னிலை அருகே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரியை சேர்ந்தவர் என அடையாளம் தெரிந்தது.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள ராக்கியம் கவுண்டன்வலசுவில் கடந்த 21-ந் தேதி சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பெண்ணின் அடையாளம் காண்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், இறந்த பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி வைத்தனர்.

அடையாளம் தெரிந்தது

அதுமட்டுமின்றி கொலையாளிகளை பிடிக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி மல்லூத்து பகுதியை சேர்ந்த சேகர் (வயது 50) என்பவர் தனது மனைவி தனலட்சுமியை (38) காணவில்லை என்று அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் தென்னிலை அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் புகைப்படத்தை காண்பித்தபோது, அவர் தனது மனைவி தனலட்சுமி என்று தெரிவித்தார்.

மேலும் அதனை உறுதி செய்வதற்காக நேற்று, கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு வந்தார். அங்கு இருந்த பெண்ணின் உடலை பார்த்து, தனது மனைவி தனலட்சுமி என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து போலீசார், தனலட்சுமியின் உடலை சேகரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் தனலட்சுமி, கரூர் மாவட்டம் தென்னிலைக்கு எதற்காக வந்தார்?, அவரை யாராவது கடத்தி வந்து இங்கு கொலை செய்து விட்டு சென்றார்களா?, அவரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story