பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கந்தசாமி தகவல்


பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 25 July 2019 11:15 PM GMT (Updated: 25 July 2019 5:27 PM GMT)

பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்து தனி தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ‘பால சக்தி புரஷ்கார்’ என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும். இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலை சிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக ‘பால கல்யாண் புரஷ்கார்’ என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு 1 லட்சம் ரூபாய்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அமைச்சகத்தின் www.nc-aw-cd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதிற்காக இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளபட மாட்டாது. இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தையொட்டி அதற்கு முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Next Story