திருவாரூரில், வரதட்சணை கொடுமையால், நகைக்கடை உரிமையாளர் மனைவி தீக்குளிப்பு


திருவாரூரில், வரதட்சணை கொடுமையால், நகைக்கடை உரிமையாளர் மனைவி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 26 July 2019 10:30 PM GMT (Updated: 26 July 2019 9:04 PM GMT)

திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நகை கடை உரிமையாளர் மனைவி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவர், திருவாரூரில் நகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மைதிலி(வயது 29). இவர்களுக்கு திருமணம் நடந்து 2½ ஆண்டுகள் ஆகிறது. 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மைதிலி தனது உடம்பில் மண்எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீ வைத்து கொண்டார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து மைதிலியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மைதிலியிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணத்தின்போது தனக்கு 50 பவுன் நகைகள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை தனது குடும்பத்தினர் வழங்கினர்.

ஆனால் தொடர்ந்து வரதட்சணை கேட்டு எனது கணவர் அருண், மாமனார் இளங்கோ, மாமியார் சுபா ஆகியோர் கொடுமைபடுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்து நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story