கும்பகோணம் பகுதியில் கரும்புகளில் தோகை உரிக்கும் பணி ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை


கும்பகோணம் பகுதியில் கரும்புகளில் தோகை உரிக்கும் பணி ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை
x
தினத்தந்தி 28 July 2019 10:30 PM GMT (Updated: 28 July 2019 7:06 PM GMT)

கும்பகோணம் பகுதியில் கரும்புகளில் தோகை உரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உரிக்கப்படும் தோகை கால்நடைகளின் உணவுக்காக ஒரு கட்டு ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கரும்பு பரவலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பணப்பயிராக கருதப்படும் கரும்பு நடவு செய்த நாளில் இருந்து 12 மாதங்களில் அறுவடைக்கு வரும். கரும்புகளில் வளரும் தோகைகளை உரித்து, அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டால் அதன் கணுக்களில் வேர்கள் முளைத்து விடும்.

மேலும் கரும்புகள் வளைந்து பயன்பாட்டுக்கு உதவாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் கரும்பு பயிர் செய்துள்ள கும்பகோணம் பகுதி விவசாயிகள் கரும்பில் மண்டியுள்ள தோகைகளை உரிக்கும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கரும்பு பயிர் செய்துள்ள நாகக்குடியை சேர்ந்த விவசாயி சுதாகர் கூறியதாவது:-

வளர்ச்சி குறையும்

கரும்பு பயிரை நடவு செய்தது முதல் அறுவடை செய்யும் வரை தோகையை உரிப்பது வழக்கம். தோகைகளை முறையாக அகற்றி பராமரிக்காமல் விட்டால் கரும்பு வளர்ச்சி குறைந்து விடும். கரும்பின் தோகைகளை அவ்வப்போது அகற்றி, அதை நிமிர்த்து விடுவதால், நல்ல மகசூல் கிடைக்கிறது.

கரும்பு தோகைகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகின்றன. கால்நடைகளின் உணவுக்காக ஒரு கட்டு கரும்பு தோகை ரூ.20-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் கரும்பு உரிப்பதற்கான கூலி செலவு தொகை திரும்ப கிடைத்து விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story