குளித்தலை அருகே பயங்கரம்: தந்தை-மகன் படுகொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


குளித்தலை அருகே பயங்கரம்: தந்தை-மகன் படுகொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 July 2019 11:30 PM GMT (Updated: 29 July 2019 7:25 PM GMT)

குளித்தலை அருகே தந்தை-மகனை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நச்சலூர்,

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. இவருடைய மகன் நல்லதம்பி (42). இவர்களுக்கு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோவில் அருகே சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மல்லிகை, ரோஜா மலர்ச் செடிகளை பயிரிட்டுள் ளனர். இதனை கவனிப்பதற்கு தற்போது அந்த நிலத்தின் அருகே வீடு கட்டி வீரமலை தனது மனைவி மகன்-மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நல்லதம்பி தனது தோட்டத் தில் பறித்த மல்லிகை பூக்களை திருச்சிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று விற்றுவிட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நச்சலூர் அருகே ஒத்தக்கடை- முதலைப்பட்டி சாலையில் வந்தபோது அப்பகுதியில் உள்ள பழைய வானொலி நிலைய அறை உள்ளே மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நல்ல தம்பியை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் அவரை சரமாரியாக தலை, கழுத்து, கால் ஆகிய பகுதிகளில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே நல்லதம்பி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் வீரமலை வசித்து வரும் தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது தனது பேரனை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக வீரமலை தனது வீட்டின் அருகே காத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் வீரமலையையும் அரிவாளால் தலை, கைகள் என பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் இறந்ததை உறுதி செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக முதலைப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி வரத ராஜனுக்கு தகவல் கொடுத்த னர். அவர் குளித்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையில், குளித்தலை துணை சூப்பிரண்டு கும்ம ராஜா, குளித்தலை இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் கரூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப் பட்டது. அது கொலை செய்யப்பட்ட தந்தை- மகனின் உடல்களை மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று படுத்துக் கொண்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நல்லதம்பி கொலை செய்யப்பட்ட இடத்தின் அருகே இருந்த வானொலி நிலைய அறையில் மர்ம நபர்கள் விட்டு சென்ற அரிவாள்கள், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வீரமலை, நல்லதம்பியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதுபோல இருந்தது.

இந்த படுகொலை சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த படுகொலை சம்பந்தமாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாயின. அதாவது, முதலைப்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான 39 ஏக்கர் சுற்றளவில் உள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக வீரமலை, வழக்கறிஞர் மூலமாக மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 25-ந் தேதியன்று தோகைமலை ஒன்றிய ஆணையர், வருவாய்த்துறை யினர் நில அளவையாளர் (சர்வேயர்) உள்பட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளத்தை பார்வையிட்டு அளந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சில நபர்கள் கூலிப்படை யினரை வைத்து தந்தை- மகனை படுகொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நல்லதம்பிக்கு தமிழரசி என்ற மனைவியும், மகன், மகளும் உள்ளனர்.

தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முதலைப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story