மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி காடாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல்


மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி காடாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 7:33 PM GMT)

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி காடாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடைபெற்றது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள காடாம்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இதில் 1,856 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் போட்டியிட ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில், ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முதலிப்பட்டி ரெங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு காடாம்பட்டி கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் மீண்டும் தேர்தல் நடத்தி இயக்குனர், தலைவர், துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது.

இதன்படி 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் 30 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 3 பேர் வாபஸ் பெற்ற நிலையில், 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆதிதிரா விடர் வகுப்பை சேர்ந்த 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 இயக்குனர் பதவிக்கு 17 பேர் களத்தில் உள்ளனர். இதற்கான தேர்தல் நேற்று காடாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. வினரிடையே மோதல் ஏற்பட்டதால், நேற்றைய தேர்தலில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வைத்தியநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு முன்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 10 பேர் வாக்களிக்கும் வகையில், பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் உறுப்பினர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக வாக்களித்து சென்றனர்.

வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

Next Story