அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை


அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:45 PM GMT (Updated: 7 Aug 2019 5:56 PM GMT)

அரியலூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட எரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி(வயது 56). கூலித் தொழிலாளி. இவருடைய மகனுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையன்(50) மகனுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாம். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில், கடந்த 5-ந்தேதி அந்த கிராமத்தில் உள்ள அரசமரத்தடியில் சின்னதம்பி, கருப்பையன் மற்றும் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக சின்னதம்பிக்கும், கருப்பையனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த கருப்பையன் அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து சின்னதம்பியின் மண்டையில் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னதம்பி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சின்னதம்பியின் மனைவி வெற்றிசெல்வி வெங்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையனை கைது செய்தனர். கூலித் தொழிலாளியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story