செந்துறையில் பிரச்சினைக்குரிய கோவில் நிலத்தை அளக்கும் பணி தீவிரம்


செந்துறையில் பிரச்சினைக்குரிய கோவில் நிலத்தை அளக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 7:55 PM GMT)

செந்துறையில் பிரச் சினைக்குரிய கோவில் நிலத்தை அளக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறையில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் செந்துறை சிவன் தாண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் 60 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1984-ம் ஆண்டு அற நிலையத்துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு விற்பனை செய்தது. இதனை எதிர்த்து அந்த இடத்தில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 34 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கு பல்வேறு நீதிமன்றத்தில் நடைபெற்று இரு தரப்பினருக்கும் சாதகமாக மாறி, மாறி தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதன்படி பிரச்சினைக்குரிய இந்த 10 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அளந்து காட்டும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி செந்துறை தாசில்தார் தேன்மொழி மற்றும் நில அளவையர்கள் பிரச்சினைக்குரிய இடத்திற்கு வந்து அளவிடும் பணியை மேற்கொண்டனர்.

அளவீடு

பாதுகாப்புக்காக அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நிலத்தை அளப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி அறநிலையத்துறை சார்பாக நிலத்தினை அளவீடு செய்கிறோம் ஆகையால் பிரச்சினைக்குரிய அரசு கூட்டமைப்பினர் மற்றும் விவசாயிகள் இந்த பகுதிக்கு வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதனை தொடர்ந்து வருவாய்த் துறையினர் கடந்த 2 நாட்களாக கோவில் நிலத்தை அளவிடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story