தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்


தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:30 PM GMT (Updated: 11 Aug 2019 5:48 PM GMT)

தீவன அபிவிருத்தி திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் சாந்தா தகவல்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கறவை மாடுகளில் பால் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்தினை அதிகரிப்பதற்கு ஏதுவாக பசுந்தீவன உற்பத்தியை பெருக்குவதற்கு மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2019-20-ம் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகளது நிலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய பசுந்தீவனங்களை பயிரிட ஏதுவாக இறவையில், கோ-4, கோ-5 புற்கரணைகள், 4 சென்ட்டில் பயிரிட்டு வளர்க்க 640 கரணைகளும்,கோ (எப்.எஸ்) 29, புல் வளர்க்க 2 சென்ட்டிற்கு 40 கிராம் விதைகளும், வேலி மசால் தீவனப் பயிரை வளர்க்க 1.5 சென்ட்டிற்கு 120 கிராம் விதைகளும் வழங்கபடுகிறது.அதேபோல மக்காச்சோள தீவன பயிர் வளர்க்க 1 சென்ட்டிற்கு 3 பருவத்திற்கு 480 கிராம் விதைகளும், தட்டைப்பயிர் வளர்க்க 1.5 சென்டிற்கு 4 பருவத்திற்கு 480 கிராம் விதைகளும், வரப்பு ஓரமாக 2 மீட்டர் இடைவெளியில் சூபா புல் மரம் வளர்த்திட 100 கிராம் விதைகளும் கொள் முதல் செய்ய 100 சதவீதம் மானியமாக மொத்தம் 10 சென்ட்டிற்கு ரூ.550 வீதம் வழங்க 100 ஏக்கருக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நீர்ப்பாசன வசதியில்லாத மானாவாரி நிலப்பகுதிகள் கொண்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கென மானாவாரி தீவன சோளம் மற்றும் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய ஒவ்வொரு 0.25 ஏக்கர் (25 சென்ட்) நிலப்பரப்பில் பயிரிட்டு வளர்க்க தேவைப்படும் 3 கிலோ தரமான தீவன சோள விதையும், 1 கிலோ தட்டைப்பயிறு விதையும் (1 ஏக்கருக்கு 12 கிலோ சோள விதைகள் மற்றும் 4 கிலோ தட்டைப் பயிர் விதைகள்) வழங்கிட பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம். முன்னுரிமை அடிப்படையில் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story