மூங்கில்துறைப்பட்டு அருகே, தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.7 லட்சம் சேதம்


மூங்கில்துறைப்பட்டு அருகே, தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.7 லட்சம் சேதம்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 5:50 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்குபாலன் (வயது 37). நேற்று மதியம் இவருடைய கூரை வீட்டுக்கு மேலே சென்ற மின்சார கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியது. இதில் ஏற்பட்ட தீப்பொறி சங்குபாலன் கூரைவீட்டில் விழுந்தது. இதனால் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ அருகில் இருந்த அவருடைய தம்பி அன்பழகன் மற்றும் சக்திவேல், செல்வம் ஆகியோரின் வீடுகளுக்கும் பரவி எரிந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த கூரை வீடுகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் தீ விபத்தில் சங்குபாலன் உள்பட 4 பேர்களின் வீடுகளில் இருந்த பணம், நகை மற்றும், பீரோ, கட்டில் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story