கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு


கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 12:15 AM GMT (Updated: 13 Aug 2019 12:15 AM GMT)

கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்துக்கு சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மழை நின்றாலும் வெள்ளம் வடியாததால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, ராய்ச்சூர், யாதகிரி, உப்பள்ளி-தார்வார், கொப்பல், குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தற்போது பெலகாவி உள்பட வடகர்நாடகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் வடகர்நாடக மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மழை நின்றாலும் வடகர்நாடக மாவட்டங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி போய் உள்ளது.

மேலும் சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிராமங்கள் இருளிலும் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, நிவாரண பணிகளை அரசு வேகமாக முடுக்கி விட வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்திருப்பதால், அங்கு சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், துணை ராணுவ படைவீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து மக்களை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணா, பீமா ஆற்றில் வெள்ள பெருக்கு குறைந்தாலும் துங்கபத்ரா ஆற்றில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா அருகே விருபாபுராவில் உள்ள சுற்றுலா தளத்தை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை மீட்க சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 5 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பின்னர் 5 பேரையும் மீட்பு படையினர் போராடி மீட்டனர். அதுபோல, சுற்றுலா தலத்தில் சிக்கிய 25 வெளிநாட்டினர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்கள்.

இந்த நிலையில், மாநிலத்தில் 17 மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக இதுவரை 42 பேர் உயிர் இழந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெலகாவியில் 12 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், உத்தரகன்னடாவில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், சிவமொக்காவில் 3 பேர், உடுப்பியில் 2 பேர், குடகில் 7 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், மைசூருவில் 2 பேர், தார்வாரில் 3 பேர் சேர்ந்து ஒட்டு மொத்தமாக 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் பெய்த மழையால் 12 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அந்த 12 பேரையும் தேடும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 548 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை பெய்த மழையால் 4 லட்சம் எக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மழை- வெள்ளத்திற்கு 17 மாவட்டங்களில் 86 தாலுகாக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதில், 2,694 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. கடந்த 12 நாட்களாக பெய்த மழை மற்றும் கிருஷ்ணா, பீமா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய 5 லட்சத்து 81 ஆயிரத்து 897 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 424 பேர் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

17 மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக 1,181 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த முகாம்களில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 629 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக இதுவரை 31 ஆயிரத்து 800 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதிகபட்சமாக பெலகாவியில் 7,331 வீடுகளும், உத்தரகன்னடாவில் 20,172 வீடுகளும், காவேரி மாவட்டத்தில் 6,566 வீடுகளும், தார்வாரில் 7,331 வீடுகளும் சேதம் அடைந்திருப்பதுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, மழை குறைந்திருப்பதால் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி 17 மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று மழை பாதித்த உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களை முதல்-மந்திரி எடியூரப்பா பார்வையிட்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) சிவமொக்கா மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட உள்ளார். 

Next Story