பிளாஸ்டிக் மக்கை திருடியதாக கூறி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்


பிளாஸ்டிக் மக்கை திருடியதாக கூறி மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை பள்ளிக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 8:06 PM GMT)

பிளாஸ்டிக் மக்கை திருடியதாக குற்றம்சாட்டி 5-ம் வகுப்பு மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே பெரியதாமல் செருவு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 5-ந் தேதி நடந்த தேர்தலின் போது இந்த பள்ளி வாக்குச்சாவடி மையமாக செயல்பட்டு வந்தது.

தேர்தல் பணிக்கு வந்த அலுவலர்கள் அங்கிருந்த கழிவறையில் பிளாஸ்டிக் மக்குகளை பயன்படுத்திவிட்டு கழிவறையில் வைக்காமல் வேறு ஒரு இடத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர். மறுநாள் 6-ந் தேதி பள்ளிக்கு வந்த மாணவர்கள் பிளாஸ்டிக் மக்கை எடுத்து விளையாடியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை 3 பிளாஸ்டிக் மக்குகளில் ஒன்றை காணவில்லை என்று கூறி ஒவ்வொரு மாணவரையும் அழைத்து பிளாஸ்டிக் மக்கு எங்கு உள்ளது என கேட்டுள்ளார். மேலும் 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன் அதனை எடுத்து விளையாடியது தெரியவந்ததால் அவனை தாக்கி, சாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து பெற்றோர்கள் பேரணாம்பட்டு வட்டார கல்வி அதிகாரி கோவிந்தராஜிடம் முறையிட்டனர்.

பள்ளிக்கு பூட்டு

இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த கல்வி அதிகாரி கோவிந்தராஜ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதனை அறிந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி அது குறித்த அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கல்வி அதிகாரி சென்றபின் பள்ளிக்கு பூட்டு போட்டுவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story