மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - மாணவன் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - மாணவன் பலி
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 10:23 PM GMT)

கம்பம், மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கம்பம்,

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத். அவருடைய மகன் தமீமுன் அன்சாரி (வயது 16). இவன், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்தான். அவனுடைய நண்பர் சிக்கந்தர் பாதுஷா (15). தமீமுன் அன்சாரியின் உறவினர் மகன் முகமது ஆதில் (3). இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கம்பம் சோட்டாணிக்கரை அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை தமீமுன் அன்சாரி ஓட்டினான்.

கோவில் அருகே உள்ள பாலத்தில் திரும்பியபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் தமீமுன் அன்சாரி, சிக்கந்தர் பாதுஷா ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமீமுன் அன்சாரி பரிதாபமாக இறந்தான். சிக்கந்தர் பாதுஷாவுக் கும், முகமது ஆதிலுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story