காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு 7 அமைச்சர்கள் பங்கேற்பு


காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு 7 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 5:23 PM GMT)

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறப்பு விழாவில் 7 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால் அணைகளில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்திலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கலெக்டர்கள் அண்ணாதுரை(தஞ்சை), ஆனந்த்(திருவாரூர்), சுரேஷ்குமார்(நாகை), சிவராசு(திருச்சி), உமாமகேஸ்வரி(புதுக்கோட்டை), டாக்டர் வினய்(அரியலூர்), வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டனர்.

பின்னர் மதகுகளில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்கள், விதைநெல்களை தூவி அமைச்சர்கள் வழிபட்டனர். முன்னதாக கல்லணை திறக்கப்படுவதையொட்டி கொள்ளிடத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கல்லணை பூங்காவில் உள்ள ஆதிவிநாயகர் கோவில், கொள்ளிடத்தின் உட்பகுதியில் உள்ள கருப்பண்ணசாமி கோவில் ஆகியவற்றில் மேள, தாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கல்லணையில் உள்ள கரிகால்சோழன், காவிரித்தாய், அகத்தியர், ராஜராஜ சோழன் சிலைகளுக்கும் கல்லணையை கட்டிய பொறியாளர் ஆர்தர் காட்டன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சி.வி.சேகர்(பட்டுக்கோட்டை), கோவிந்தராசு(பேராவூரணி), பவுன்ராஜ்(பூம்புகார்), ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), பாரதி(சீர்காழி), ராம.ஜெயலிங்கம்(ஜெயங்கொண்டம்), ராமச்சந்திரன்(குன்னம்), ஆறுமுகம்(கந்தர்வக்கோட்டை), மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு தலா 1,000 கனஅடியும், கல்லணைக்கால்வாயில் 500 கனஅடியும் என மொத்தம் 3,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரிலும், திருவாரூரில் 1 லட்சத்து 27 ஆயிரம் எக்டேரிலும், நாகையில் 1 லட்சத்து 26 ஆயிரம் எக்டேரிலும், புதுக்கோட்டையில் 10 ஆயிரம் எக்டேரிலும், கடலூரில் 41 எக்டேரிலும் என மொத்தம் 4 லட்சத்து 9 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களின் கடைமடை பகுதிகள் வரை சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பா சாகுபடி செய்வதற்கு வசதியாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆறுகளில் திறந்து விடப்படும் தண்ணீரை குளம், ஏரிகளில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story