பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; 9-ந் தேதி வேலைநிறுத்த நோட்டீசு கொடுக்க முடிவு


பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்; 9-ந் தேதி வேலைநிறுத்த நோட்டீசு கொடுக்க முடிவு
x
தினத்தந்தி 17 Aug 2019 11:15 PM GMT (Updated: 17 Aug 2019 9:10 PM GMT)

பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9-ந்தேதி வேலை நிறுத்த நோட்டீசு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்திட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஒப்பந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் சக்கரபாணி தலைமை தாங்கினார். தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் பழனிவேல் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

இதில் தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஸ்டாலின், ஹென்றி, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராஜபாண்டியன், சின்ன ரகுராமன், பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகவேல், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் நிர்வாகிகள் அன்பழகன், முருகவேல், திருநாவுக்கரசு, தொழிலாளர் விடுதலை முன்னணி சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. ஒப்பந்த தொழிலாளர் சங்க பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அடுத்த மாதம் 9-ந்தேதி 2-வது வட்டத்தில் உள்ள பெரியார் சதுக்கத்தில் இருந்து பேரணியாக சென்று நெய்வேலி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த அறிவிப்புக்கான நோட்டீசு கொடுப்பது என்றும், பேரணியில் அனைத்து அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களை கலந்து கொள்ள செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Next Story