மத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு


மத்திய அரசின் சட்டங்களால் மாநில அரசுகளின் உரிமைகள் பறிப்பு ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Aug 2019 11:00 PM GMT (Updated: 18 Aug 2019 6:51 PM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மூலமாக மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஜவாஹிருல்லா குற்றம் சாட்டி உள்ளார்.

கும்பகோணம்,

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளோம். காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்- அமைச்சர்கள் வீட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்களை காஷ்மீரில் நுழைய வைப்பதற்காக இதுபோன்ற சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மக்களிடையே மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். முத்தலாக் தொடர்பான சட்டம் சிவில் சட்ட வடிவில் இருந்தது. தற்போது கிரிமினல் குற்றவடிவ சட்டமாக மாற்றி உள்ளனர். அதற்கு 3 ஆண்டு தண்டனை என்பது ஏற்க முடியாதது.

மற்றொரு சட்டத்தினால் தனிநபரை பயங்கரவாதி என அறிவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஜனநாயக நாட்டிலும் இதுபோன்ற அவலங்கள் இல்லை. பல சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. இதை எல்லாம் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்து வருகிற 25-ந் தேதி திருச்சி, மதுரை, சென்னை, திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

தமிழக அரசு குடிமராமத்து திட்டத்துக்காக ஒதுக்கிய தொகையில் 10 சதவீதம் கூட வேலை நடைபெறவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால்தான் இந்த பகுதியில் உள்ள கனிம வளங்களை யாரும் கொள்ளையடிக்க முடியாது.

பா.ஜனதா ஆட்சியில் இந்திய பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. மேலும் பா.ஜனதா அரசின் பல திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி தடைபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story