குடிமராமத்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் தகவல்


குடிமராமத்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:11 PM GMT)

குடிமராமத்து பணிகள் விரைந்து முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை கூடுதல் செய லாளர் பாலாஜி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமராமத்து திட்டம் குறித்து பாசனதாரர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த், நிதித்துறை துணை செயலாளரும், குடிமராமத்து கணிப்பாய்வு அதிகாரியுமான அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) கூடுதல் செயலாளர் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

விரைவாக முடிக்கப்படும்

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 95 பணிகள் ரூ.16 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரம் செலவில் நடைபெற்று வருகிறது. பணிகளை மேற்கொள்ளும் பாசனதாரர்கள் சங்கத்துக்கு முடிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு ஏற்ப காலதாமதமின்றி தொகை விடுவிக்கப்பட வேண்டும். அதேபோல சிறப்பு தூர்வாரும் பணியின் கீழ் ரூ.14 கோடியே 89 லட்சம் மதிப்பில் 48 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் எந்த பணியை உடனடியாக செய்ய முடியுமோ, அப்பணிகள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.

150 பொக்லின் எந்திரங்கள்

7 டெல்டா மாவட்டங்களில் 150 பொக்லின் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கூடுதலாக செயற்பொறியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர். தமிழக முதல்-அமைச்சரின் நேரடி பார்வையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) கண்ணன் மற்றும் பாசனதாரர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story