மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு


மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் கலெக்டர்கள் உத்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:57 PM GMT)

பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் மருத்துவ கழிவுகளை கையாளும் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகளின் மேலாண்மை விதியானது கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி பெரம்பலூர்- அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள், கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்த தான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிற்கு பொருந்தும்.

விதி 10-ன் கீழ், மருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் படிவும் 2-ல் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து, படிவம்-3-ல் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.

உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தினையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முதன்மை பெஞ்ச், புதுடெல்லி கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதியிட்ட உத்தரவில் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை இணங்க தவறியவர்களுக்கு சுற்றச்சூழல் இழப்பீட்டு தொகையை விதிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் சாந்தா (பெரம்பலூர்), டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story