சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தண்ணீர் லாரிகள்-இன்று முதல் வேலைநிறுத்தம்


சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தண்ணீர் லாரிகள்-இன்று முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 20 Aug 2019 9:30 PM GMT (Updated: 20 Aug 2019 6:52 PM GMT)

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று (புதன்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தண்ணீர் லாரிகளே மக்களுக்கு கடவுளாக காட்சி தருகின்றன. தினமும் அடிகுழாய் பம்புகளையே ஆவலுடன் எதிர்நோக்கி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள், சென்னைவாசிகள். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் முறையாக குடிநீர் வாரியத்திடம் முன்பதிவு செய்து தங்கள் குடியிருப்புகளுக்கு அவ்வப்போது குடிநீர் பெற்று பணத்துக்கு இணையாக சிக்கனமாக குடிநீரை செலவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் தற்போது தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகன் கூறியதாவது:-

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது ஏதோ திருட்டு போல அரசு முத்திரை குத்தி வருகிறது. செழிப்பான நிலத்தடி நீர்மட்டம் உள்ள இடங்களில் தண்ணீரை உறிஞ்சி அதை தேவைப்படும் இடங்களுக்கு சென்று மக்களிடம் வினியோகம் செய்கிறோம். இதற்காக முறையான உரிமம் கேட்டு பல ஆண்டுகளாக அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஆனால் அரசு எங்களை மதிக்கவே இல்லை.

‘நீரை கனிம வளத்தில் சேர்த்துவிட்டோம், எனவே அரசு தவிர தனியாருக்கு இந்த உரிமம் தர இயலாது’, என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இது தவறு. நீர், கனிம வளம் இல்லை. மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தவிர இதுவும் ஒருவகையில் மக்கள் சேவைதான். ஏற்கனவே எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

கடந்த மே மாதம் கூட போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் இப்போது வரை எதுவும் நடக்கவில்லை.

எனவே மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து உள்ளோம். இதனால் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது.

தற்போதைய சூழலில் வேலைநிறுத்தத்தை அறிவித்திருப்பது கடினமான முடிவு தான். ஆனால் இந்த நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம் என்பது தான் உண்மை. எனவே எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க உரிமம் தரும் பட்சத்தில் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story