குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு


குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Aug 2019 11:00 PM GMT (Updated: 20 Aug 2019 8:20 PM GMT)

குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள புதுப் பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கஸ்தூரி (வயது 48). இவர் குளித்தலை கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மகளும், ஒரு மகனும் உள்ளனர். கஸ்தூரியின் கணவர் சேகர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர், அமைச்சர் வளர்மதியின் அண்ணன் ஆவார். இந்த நிலையில் கஸ்தூரியின் 3-வது மகளான ரம்யாவிற்கு கடந்த 15-ந் தேதி குளித்தலை அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதற்காக கஸ்தூரி தனது மகளுடன் மருத்துவ மனையில் தங்கியிருந்தார். கடந்த 16-ந் தேதி வீட்டுக்கு வந்த கஸ்தூரி, மகளுக்கு தேவையான சில பொருட்களை எடுத்துக்கொண்டு, வீட்டை பூட்டி விட்டு மீண்டும் மருத்துவ மனைக்கு சென்றார். இதற் கிடையில் கடந்த 18-ந் தேதி இரவு அவரின் முதல் மகளான சரண்யா, தனது தாயார் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் முன்பக்கம் உள்ள கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றுபார்த்தபோது, வீட்டில் இருந்த அனைத்து கதவுகளும் திறந்தநிலையில் கிடந்தது. வீட்டின் உள்ளே முன்பகுதியில் உள்ள அறை கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு அந்த அறையில் இருந்த பீரோவும், அதுபோல் வீட்டினுள் இருந்த மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவும் திறந்திருந்தது. மேலும் நகைகள் வைத்திருக்கும் பெட்டிகள் வீட்டின் பின்புறம் சிதறி கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா தனது தாயார் கஸ்தூரிக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை-பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கஸ்தூரி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அவரது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் மாடி வழியாக வந்த மர்ம நபர்கள் மாடியில் இருந்த கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டின் உள்ளே இருந்த கதவை உடைத்து பீரோவில் இருந்த 5½ பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்க பணம், வெள்ளி கொலுசு உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் தடயங்களை பதிவு செய்து கொண்டனர். கஸ்தூரி மருத்துவமனைக்கு சென்றதை நோட்டமிட்ட நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். அமைச்சரின் அண்ணன் வீட்டில் நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story