பெரம்பலூர், அரியலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


பெரம்பலூர், அரியலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 8:01 PM GMT)

பெரம்பலூர், அரியலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

அரியலூர்,

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ந் தேதி ஆண்டுதோறும் மத நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் நேற்று மத நல்லிணக்க நாள் உறுதிமொழி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கலெக்டர் சாந்தா தலைமையில் ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் “நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு ஏதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் உறுதி அளிக்கின்றேன்“ என்ற நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தலைமையில் நேற்று எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன் மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story