வேதாரண்யம் அருகே கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு


வேதாரண்யம் அருகே கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 21 Aug 2019 11:15 PM GMT (Updated: 21 Aug 2019 5:16 PM GMT)

வேதாரண்யம் அருகே கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர். கார் மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கோடிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை போனது. இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் (பொறுப்பு) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் திருக்குவளை வட்டம், ராமன் கோட்டகம், ஏர்வகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் உதயகுமாரின் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர்.

சிலைகள் மீட்பு

அப்போது அவரது வீட்டில் இருந்த வள்ளி, தெய்வானை சிலைகள் மற்றும் இன்வர்ட்டரை மீட்டனர். சிலைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற 2 சிலைகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story