புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்


புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
x
தினத்தந்தி 21 Aug 2019 11:00 PM GMT (Updated: 21 Aug 2019 7:28 PM GMT)

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை பகுதியை சேர்ந்தவர் தொண்டிமுத்து மகன் தொண்டீஸ்வரன் (வயது 25). இவர், ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செம்புமகாதேவிபட்டினம் பகுதியில் தங்கி நாட்டுப்படகு மூலம் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் செம்புமகாதேவிபட்டினத்திலிருந்து தொண்டீஸ்வரன் தனது நாட்டுப்படகில், தொண்டீஸ்வரன் மற்றும் நம்புதாளை பகுதியை சேர்ந்த தூண்டி மகன் முத்துமாரி (30), லட்சுமண் மகன் தனிக்கொடி (35), காத்தமுத்து மகன் ராமலிங்கம் (42) ஆகிய 4 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

4 பேர் கைது

இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

மேலும் அவர்களது நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சோகத்தையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story