கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை


கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 5:52 PM GMT)

தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கக்கோரி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாலை கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்த வேலை தற்போது முறையாக வழங்கப்படவில்லை என புகார் கூறப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள ஒரு சிலரின் தனிப்பட்ட தலையீட்டால் வேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், தங்களுக்கு தொடர்ந்து பணிகளை வழங்கிட கோரியும் மேற்கண்ட பாஞ்சாலை கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அதிகாரி அருளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story