தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்


தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் பாடை கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 5:57 PM GMT)

தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள திருச்சி படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று பாடை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊழியர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

திருச்சி,

இந்தியா முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 6 தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில் 2 தொழிற்சாலைகள் திருச்சியில் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கிகள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இங்கு, நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாருக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் 41 படைக்கலன் தொழிற்சாலைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாதம் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 3-வது நாளாக திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச்.ஏ.பி.பி. தொழிற்சாலைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை ஊழியர்கள் தொழிற்சாலை முன்பு சாலையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாடைகட்டி அதில் ஒரு பொம்மையை படுக்க வைத்து இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர்கள் ஒப்பாரி வைத்தனர். அந்த பாடையின் முன்பு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வைக்கப்பட்டிருந்தது. அதில், வேலைக்கு சென்ற ஊழியர்கள் குறித்து சில தகவல்கள் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்தினருடன் தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். படைக்கலன் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.


Next Story