மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊரக தொழில்துறை அமைச்சர் தகவல்


மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊரக தொழில்துறை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2019 11:00 PM GMT (Updated: 22 Aug 2019 8:20 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமீன் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மாநாடு நேற்று கரூரில் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் உலக முதலீட்டாளர் களுக்கான மாநாட்டில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நடந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இந்த மாநாட்டில் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் இருந்தும் தொழில் அதிபர்கள் பலர் கலந்துகொண்டனர். கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள மாயனூர் கதவணையோடு சேர்த்து புதிதாக 3 கதவணைகள் அமைய இருக்கின்றன. இதன் மூலம் 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருக்கும்.

தமிழகத்தில் விரைவில் மின்சாரத்தால் இயங்கும் 825 பஸ்களை தமிழக முதல்- அமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமி ழகத்தின் பெருநகரங்களில் மட்டும் முதற்கட்டமாக மின்சாரத்தால் இயங்கும் பஸ்கள் இயக்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஊரக தொழில்துறையின் சார்பில் தொழி லாளர்களுக்கான தங்கும் விடுதியும், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையினை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

48 ஆயிரம் வேலைவாய்ப்பு

தொடர்ந்து ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் பேசுகையில், தமிழகத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக கையெழுத்திடப்பட்டுள்ள 12 ஆயிரத்து 360 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நேற்று வரை 2 ஆயிரத்து 775 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 4 ஆயிரத்து 625 கோடி ரூபாய் முதலீட்டில், 48 ஆயிரத்து 203 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இந்த மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டை செய்வதற்கு 838 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், கையெழுத்திட்டுள்ளன. அனைத்து ஒப்பந்தங்களையும், குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு, தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரூரில் தொழில் வளர்ச்சிக்கு...

கடந்தாண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்ட சிறு, குறு தொழில் தொடங்க விரும்புவோருக்கான ஒற்றைச்சாளர முறையிலான ஆன்லைன் பதிவு திட்டம் மூலம், இதுவரை பெறப்பட்ட 698 விண்ணப்பங்களில், 624 விண்ணப்பங்களுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.1,386 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 27,363 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களின் மீது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கு கடந்த 8 ஆண்டுகளில், ரூ.2 ஆயிரத்து 685 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

இதில், மாவட்ட கலெக்டர் அன்பழகன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் ஹரிதியாகராஜன், கரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், கரூர் வைசியா வங்கியின் தலைவர் நடராஜன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சிவசாமி, நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story