காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகள் புனரமைப்பு பணி தொடக்கம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகள் புனரமைப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 5:39 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஏரிகள் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர்,

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும், புனரமைப்பு பணிகளுக்காகவும் சிறப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் அறிவித்தார். இந்த பணிகளுக்காக முதல் கட்டமாக அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்தநிலையில், காஞ்சீபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்க திட்டத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெமிலி சிற்றேரியை புனரமைப்பதற்காக ரூ.5 லட்சத்து 74 ஆயிரமும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நெமிலி சிற்றேரியில் மதகுகள் மற்றும் கால்வாய்கள் கட்டுமான பணிகள் ரூ.18 லட்சத்து 73 ஆயிரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, ஓப்பந்ததாரர் மூர்த்தி, வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னவசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம் கிராமத்தில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஓன்றியத்திற்கு சொந்தமான மெய்யாத்தம்மன் சிறுபாசன ஏரி உள்ளது. இந்த ஏரி 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தநிலையில் ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த பொதுமக்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்-அமைச்சர் இந்த ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் செலவில் நல்லம்பாக்கம் மெய்யாத்தம்மன் சிறுபாசன ஏரியை சீரமைக்க நிதி ஒதுக்கினார். இதனையடுத்து இந்த ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் புனரமைப்பு பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி ஏரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, வீ.டி.லீமாரோஸ், உதவி பொறியாளர் மாரிசெல்வம், நல்லம்பாக்கம் ஊராட்சி செயலாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள எழிச்சூர் கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள் ஆழப்படுத்துதல் மற்றும் கரை பலப்படுத்துதல் போன்ற பணிகளுக்கான தொடக்க விழா எழிச்சூர் கிராமத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கி குடிமராமத்து திட்டத்தின் கீழ் எழிச்சூர் ஊராட்சியில் ரூ.91 ஆயிரம் செலவில் விளங்காத்தம்மன் கோவில் குளத்தை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணியினை தொடங்கி வைத்தார். உதவி பொறியாளர்கள் சுப்புராஜ், வசுமதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் பழந்தண்டலம் ஊராட்சியில் ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் வண்ணான்குட்டை சிறு பாசன ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பணி மேற்பார்வையாளர் கவாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story