குன்னம் அருகே சாலையோரம் ஜீப் கவிழ்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு படுகாயம்


குன்னம் அருகே சாலையோரம் ஜீப் கவிழ்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு படுகாயம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 7:00 PM GMT)

கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் படுகாயமடைந்தார்.

குன்னம்,

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவலர் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று அரியலூரில் நடைபெற உள்ள காவலர் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க நேற்று காலை திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேரன் அரியலூருக்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். இவர் குன்னம் அருகே உள்ள சடைக்கன்பட்டி என்ற இடத்தில் ஜீப்பில் சென்று கொண்டு இருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் சின்னு (வயது 60) அரியலூர்-பெரம்பலூர் சாலையை கடக்க முயன்றார். முதியவர் மீது மோதாமலிருக்க டிரைவர் சிவக்குமார் திடீரென ஜீப்பை நிறுத்தினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் படுகாயமடைந்தார். டிரைவர் சிவக்குமார் காயமின்றி தப்பினார். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story