சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு


சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 11:00 PM GMT (Updated: 25 Aug 2019 8:22 PM GMT)

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் நேரு எம்.எல்.ஏ. பேசினார்.

திருச்சி,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது ஆகியவற்றை கண்டித்தும், சட்ட விரோத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஷபியுல்லா கான் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் அமீன், அமைப்பு செயலாளர்கள் பாதுஷா, சரவண பாண்டியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும்போது ‘நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு சிறுபான்மையின மக்கள் அளித்த ஆதரவு தான் காரணமாகும். சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பதால் எங்களை பெரும்பான்மையினருக்கு விரோதி என சொன்னாலும் பரவாயில்லை என தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். சிறுபான்மையினருக்கு எவ்வளவு இடைஞ்சல்கள் வந்தாலும் அவர்களை பாதுகாக்க நாங்கள் தயாராக இருப்போம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க. இருக்கும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோரும் பேசினார்கள். பசு காவலர்கள் என்ற பெயரால் முஸ்லிம்கள் கும்பலாக கொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Next Story