திருக்கோவிலூர் அருகே, இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை


திருக்கோவிலூர் அருகே, இளம்பெண், விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 10:30 PM GMT (Updated: 26 Aug 2019 12:11 AM GMT)

திருக்கோவிலூர் அருகே சமையல் செய்யாததை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் முருகேசன் மகள் ஜானகி(வயது 21). இவர் சம்பவத்தன்று மாலை வீட்டில் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த முருகேசனும், அவரது மனைவி மஞ்சுளாவும் ஜானகியிடம் ஏன் சமையல் செய்யாமல் டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறாய்? என கேட்டு, அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஜானகி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜானகி உயிரிழந் தார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் செய்யாததை பெற்றோர் கண்டித்ததால், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story