ஈரோடு மாநகராட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு ஊராட்சிக்கோட்டை தண்ணீர் நவம்பர் மாதம் முதல் வினியோகம்: எம்.எல்.ஏ.க்கள் குழுவினரிடம் ஆணையாளர் தகவல்


ஈரோடு மாநகராட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு ஊராட்சிக்கோட்டை தண்ணீர் நவம்பர் மாதம் முதல் வினியோகம்: எம்.எல்.ஏ.க்கள் குழுவினரிடம் ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2019 11:00 PM GMT (Updated: 27 Aug 2019 6:31 PM GMT)

ஈரோடு மாநகராட்சியில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு ஊராட்சிக்கோட்டை தண்ணீர் நவம்பர் மாதம் முதல் வினியோகம் செய்யப்படும் என்று எம்.எல்.ஏ.க்கள் குழுவினரிடம் மாநகராட்சி ஆணையாளர் கூறினார்.

பவானி,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

ஈரோடு மாநகராட்சிக்கான தனிக்குடிநீர் திட்டப்பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் பகுதியில் காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யும் பகுதி, அங்கு கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட பணிகளை எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தனர். அப்போது திட்டம் குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக ஈரோடு மாநகராட்சி தனிக் குடிநீர் திட்டம் ரூ.484 கோடியே 45 லட்சம் செலவில் நடந்து வருகிறது. மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் பங்களிப்பு 50 சதவீதமாகவும், மாநில அரசின் பங்களிப்பு 20 சதவீதமாகவும், உள்ளாட்சி அமைப்பின் பங்களிப்பு 30 சதவீதமாகவும் உள்ளது. வரதநல்லூர் பகுதியில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் தண்ணீர் 22 கிலோ மீட்டர் தொலைவில் ஈரோடு வ.உ.சி.பூங்கா மற்றும் சூரியம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து சுமார் 720 கிலோ மீட்டர் அளவுக்கு இணைப்பு குழாய்கள் போடப்பட்டு ஈரோடு மாநகராட்சியில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். குழாய் இணைப்பு பணிகள் 40 சதவீதம் முடிந்து விட்டது. இந்த திட்டத்துக்காக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 46 மேல்நிலை தொட்டிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன. புதிதாக 21 தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. திட்டப்பணிகள் 85 சதவீதம் முடிந்து விட்டன.

மீதமுள்ள பணிகள் அடுத்த மாதம்(செப்டம்பர்) இறுதிக்குள் முடிந்து விடும். அக்டோபர் மாதம் ஊராட்சிக்கோட்டை தண்ணீர் மெயின் குழாய் மூலம் வ.உ.சி.பூங்கா மற்றும் சூரியம்பாளையம் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு செல்லப்படும். தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இருந்து வெள்ளோட்டமாக வீடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இணைப்புகளில் தண்ணீர் வினியோகம் தொடங்கும். 3 மாதத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நிறைவுபெற்றுவிடும். அனைத்து வீடுகளுக்கும் தினமும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

இதுவரை குடிநீர் இணைப்பு தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்தியாவிலேயே முதன் முதலாக ஈரோடு மாநகராட்சியில், மாநகராட்சியில் வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி செலவிலேயே குடிநீர் இணைப்பு வழங்குகிறது. இதற்கான செலவுத்தொகையும் திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் குடிநீர் பயன்படுத்தும் அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை தற்போதுவரை காவிரியில் 9 இடங்களில் தினசரி நீரேற்றம் செய்யப்படுகிறது. தினமும் 50 மில்லியன் லிட்டர் தண்ணீர் நீரேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தினசரி 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறனரி தேவையாகும். ஆனால் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் வருகிற 30 ஆண்டுகளை கணக்கிட்டு, அதாவது மக்கள் தொகை 9 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டும்வரை தங்கு தடையின்றி தினசரி தண்ணீர் வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு ஆணையாளர் இளங்கோவன் கூறினார்.

இதனை சட்டமன்ற பேரவை பொறுநிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை எம்.எல்.ஏ.(மேட்டூர்), உறுப்பினர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. (திருவெறும்பூர்), எஸ்.ஈஸ்வரன் (பவானிசாகர்), கோவி.செழியன் (திருவிடைமருதூர்), அ.சண்முகம்(கிணத்துக்கடவு), அ.நல்லதம்பி (திருப்பத்தூர்) ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவர் எஸ்.செம்மலை எம்.எல்.ஏ. கூறும்போது, தமிழக அரசு அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் திட்டங்களை அறிவித்து செயல்படுகிறது. ஈரோடு மாநகராட்சிக்கு என்று ஊராட்சிக்கோட்டை தனி குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. வரும் காலத்தில் இந்த குடிநீர் திட்ட குழாய் கடந்து செல்லும் வழியில் உள்ள பகுதி மக்களுக்கு குடிநீர் தேவை என்று கோரிக்கைகள் வந்தால், மாநகராட்சி அனுமதி பெற்று அவர்களுக்கும் குடிநீர் வழங்க பேரவைக்குழு பரிந்துரை செய்யும் என்றார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர் பொன்னுசாமி, ஈரோடு மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story