பரம்பூர் பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பரம்பூர் பகவதி அம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 7:37 PM GMT)

பரம்பூர் பகவதி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே பரம்பூரில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 18-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை, மாலை என இருவேளைகளிலும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதையடுத்து மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் பகவதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பரம்பூர், அன்னவாசல், குடுமியான்மலை, இலுப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Next Story