ஓசூரில், முதியவர் அடித்துக்கொலை - சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு


ஓசூரில், முதியவர் அடித்துக்கொலை - சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு
x
தினத்தந்தி 27 Aug 2019 10:45 PM GMT (Updated: 27 Aug 2019 10:35 PM GMT)

ஓசூரில் முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு சாக்கடை கால்வாயில் உடல் வீசப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சி நகர் அருகே சாலையோரம் சாக்கடை கால்வாயில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த முதியவரின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் ரத்தக்காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை வேறு இடத்தில் அடித்துக்கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து சாக்கடை கால்வாயில் வீசி சென்றது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து போலீசார், கொலை செய்யப்பட்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story