பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:15 PM GMT (Updated: 29 Aug 2019 7:17 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், பாலகுமார், சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், மாநில துணை செயலாளருமான லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

புதிய கல்வி கொள்கையில் 10, 20 பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த பள்ளியாக செயல்படுத்தி கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கு கேடு விளைவிப்பதை கைவிட வேண்டும். 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு தகுதித்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும்.

இருமொழி கொள்கை

12-ம் வகுப்பு முடித்தாலும் தேசிய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே கல்லூரிகளில் சேர முடியும் என்பதை முற்றிலும் கைவிட வேண்டும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்க கூடாது. தமிழகத்தில் இருமொழி கொள்கையே நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நாகை வட்டார செயலாளர் பாலசண்முகம், மாவட்ட துணை செயலாளர்கள் இளமாறன், சிவகுமார், நீலா புவனேஸ்வரி, நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story